Saturday, September 22, 2012

கீழ்க்கட்டளையில் அம்மாவை வறுத்தெடுத்த திண்டுக்கல் லியோனி!

புகழ்பெற்ற நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் இன்றைய தினம் கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வறுத்தெடுத்தார்.

கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அருகில் உள்ள வீதியில் 22/09/2012 சனிக்கிழமை இரவு எட்டு மணியளவில் தி.மு.க அரசை ஆதரித்து உரையாற்றினார்.

வழமையாகவே தி.மு.க வின் அனுதாபியான இவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நகைச்சுவை கலந்து விமர்சித்தார்.

முக்கியமாக ஜெயலலிதா அவர்கள் சமசீர் கல்வியை நிறுத்தியமை தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

தி.மு.க வின் அரசவைக் கவிஞர் போல வரிக்குவரி கருணாநிதி புகழ் மாலை பாடினார் திண்டுக்கல் ஐ.லியோனி.





Wednesday, September 19, 2012

கீழ்க்கட்டளையில் பிரமாண்ட விநாயகர் சிலை!

இந்து மக்களால் புனிதமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றைய தினம் சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இம்முறை சென்னையின் புறநகரான கீழ்கட்டளை சந்திக்கு அருகாமையில் வழமை போல பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

இம்முறை அருள் விநாயகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 இன்று மாலை விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதையும் அதனை ஏராளமான அடியார்கள் சூழ நின்று வழிபடுவதனையும் படங்களில் காணலாம்.






Tuesday, September 18, 2012

கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற விஜயகாந்த் கட்சிக் கூட்டம்!

விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவும், தே.மு.தி.க கட்சி ஆரம்பிக்கப்பட்டு 8 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கீழ்க்கட்டளையில் இன்று மாலை இடம்பெற்றது. .









Thursday, September 6, 2012

கீழ்க்கட்டளையில் உதயமாகிய புதிய உடற்பயிற்சி கூடம் (GYM)!

கீழ்க்கட்டளையில் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் (GYM) ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இது கீழ்க்கட்டளை பொலிஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இங்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சித் துறையில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களே இங்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்பது இதன் விசேட அம்சமாகும்.









Friday, August 10, 2012

பூத்துக் குலுங்கும் மொட்டை மாடி வீட்டுத் தோட்டம்!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வளவில் பூக்கன்றுகளை நாட்டிப் பராமரிப்பது என்பது கஷ்டமான காரியம் தான்.

இதற்குப் பிரதான காரணம் இங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை தான்.

சென்னையின் புறநகர்ப் பகுதியான கீழ்க்கட்டளையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடிப் பிரதேசத்தில் சாடிகளில் வைத்துப் பராமரிக்கப்படுகின்ற பூக்கன்றுகளே இவை.

இங்கு ரோஜா, மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை போன்ற பூங்கன்றுகள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்குவதை படங்களில் காணலாம்.







சிலர் வீட்டு மொட்டைமாடியை பயனுள்ள வகையில் மரக்கறி உற்பத்திக்காகவும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

Thursday, August 2, 2012

காதல் குருவிகளின் (Love Birds) அழகிய படங்கள்!

லவ் பேர்ட்ஸ் எனப்படும் காதல் குருவிகளை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

பலரும் இந்தக் குருவிகளை விரும்பி வளர்ப்பதை ஏராளமான வீடுகளில் காணலாம்.

அந்த வகையில் கீழ்க்கட்டளைப் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்படும் குருவிகளைத் தான் நீங்கள் படங்களில் காண்கின்றீர்கள். 

இந்தப் படங்கள் பல மணிநேரம் காத்திருந்து பொறுமையாக பிடிக்கப்பட்டவை.

இந்தக் குருவிகளை கீழ்க்கட்டளையில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை நிலையமான MRF கடையிலும் வாங்க முடியும்.

இங்கு லவ் பேர்ட்ஸ், நாய்க்குட்டிகள், வண்ண மீன்கள், புறா, முயல், கூண்டுகள், போன்றவற்றை வாங்கலாம். ஆனால், இங்கு விலை கூடுதலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

லவ் பேர்ட்ஸ் குருவிகளை மலிவு விலையில் வாங்க விரும்பினால் வெள்ளிக்கிழமைகளில் கூடுகின்ற பல்லாவரம் சந்தைக்கு சென்று பேரம் பேசி வாங்கலாம்.

காதல் குருவிகள் செய்யும் காதலை நீங்களும் பாருங்கள். 








Tuesday, July 24, 2012

அதிகாலை வேளையில் மின்னொளியில் ஜொலிக்கும் கீழ்க்கட்டளை பஸ் நிலையம்!


கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அதிகாலை வேளையில் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சியைத் தான் நீங்கள் காண்கின்றீர்கள். 

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பஸ்கள் தரித்து வைக்கப்படுகின்ற இந்த இடம் அதிகாலையில் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது. 

ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று  வருகின்றார்கள். 

அதிகாலையில் ஜொலிக்கும் கீழ்க்கட்டளை பஸ் நிலையத்தின் அற்புத தோற்றத்தை நீங்களும் பாருங்களேன்..

Thursday, June 21, 2012

வித்தியாசமான மருத்துவ குணம் கொண்ட விக்ஸ் துளசி!


துளசி ஒரு மிகச் சிறந்த மூலிகைச் செடியாகும். இது (Ocimum Sanctum) என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.

இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது.

இந்து வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

 துளசியில் பல வகைகள் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் துளசியானது கீழ்க்கட்டளைப் பகுதியில் உள்ள பூக்கன்றுகள் விற்கும் நிலையம் ஒன்றில் வாங்கப்பட்டது.

இந்த துளசியில் உள்ள விசேடம் என்னவென்றால், துளசி இலையைச் சாப்பிடும் போது விக்ஸ் வாசனை வீசும். அத்துடன் கொஞ்சம் காரமாகவும் இருக்கும்.

சளிக்கு சிறந்த மருந்தாக இந்த துளசி இலை உபயோகப்படுத்தப்படுகின்றது.

எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த வித்தியாசமான துளசியை...


Wednesday, May 16, 2012

கீழ்க்கட்டளை மாம்பழத்தின் தனி ருசி!


முன்னைய நாட்களில் கீழ்க்கட்டளையில் பல வீடுகளிலும் தென்னை மரங்களும், மா மரங்களும் இயல்பாகவே காணப்படும்.

 95 ஆம் ஆண்டுகளில் கீழ்க்கட்டளை பிரதேசம் மரக்கறிப் பயிர்கள் விளைகின்ற இடமாகவும், மரங்கள் நிறைந்த காடாகவுமே காட்சியளித்தது.

ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது.

இருந்தும் சில வீடுகள் கிராமத்து வீடுகள் போலவே இப்போதும் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அப்படியான வீடு ஒன்றில் உள்ள மா மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட மாம்பழங்களை உப்பும் தூளும் சேர்த்து நண்பர்கள் சிலர் ருசித்து சாப்பிடுவதனையே படங்களில் காண்கிறீர்கள்.

Sunday, April 1, 2012

புதுப்பொலிவுடன் காணப்படும் கீழ்க்கட்டளை பஸ் நிலையம்!

கடந்த வருடம் கீழ்க்கட்டளை பஸ் நிலையமானது சீமேந்துதளம் இடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

முன்னையகாலங்களில் குண்டும் குழியுமாகவும் மழைநீர் தேங்கும் இடமாகவும் காணப்பட்ட பஸ் நிலையம் தற்போது அழகாகக் காட்சியளிக்கின்றது.

பயணிகள் உட்காருவதற்கும் இரும்புக் கதிரைகள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.

Saturday, March 10, 2012

பறவைகளின் சொர்க்கலோகமாகத் திகழும் கீழ்க்கட்டளை ஏரி!



கீழ்கட்டளைப் பிரதேசத்தில் உள்ள ஏரியானது இப்பிரதேசத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

இந்த ஏரிக்கு டிசம்பர் மாதங்களில் ஏராளமான பறவைகள் வருகின்றன. மாலை நேரங்களில் இங்கு ஏராளமான பறவைகளைக் காணக் கூடியதாக இருக்கும்.

இந்த ஏரியை பொதுமக்கள் குளிக்கவும், வாகனங்களைக் கழுவவும் பயன்படுத்துவதால் ஏரி மாசடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் அழகு எழில் கொஞ்சும் கீழ்க்கட்டளை ஏரியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.



Tuesday, February 21, 2012

சென்னை கீழ்கட்டளை வங்கியில் ரூ.14 லட்சம் கொள்ளை!


சென்னை கீழ்கட்டளையில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூ.14 லட்சத்தை பறித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை வேளச்சேரியை அடுத்துள்ள கீழ்கட்டளையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இங்கு நேற்று மதியம் திடீரென்று காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் வங்கியில் உள்ளவர்களை மிரட்டி ரூ 14 லட்சம் வங்கி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்கள் மாருதி ஆம்னி வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவன் இந்தியில் பேசியதால் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொள்ளை நடந்த வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லாததும் துப்பாக்கி ஏந்திய காவலர் இல்லாததும் கொள்ளையடிக்க ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் கொள்ளை எளிதாக நடந்துள்ளது. மேலும் வங்கியிலிருந்து அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு அபாயமணி தொடர்பு இருந்தும் கொள்ளை நடந்தபோது வங்கியில் இருந்தவர்கள் அதை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் வந்த வாகனம் பற்றிய அடையாளம் தெரியவந்ததால் சென்னை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கொள்ளை நடந்த வங்கிக்கு உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களை வளைத்து பிடிக்க வேண்டி தீவிர ஏற்பாடுகளை சென்னை நகர போலீசார் எடுத்து வருகின்றனர்.

Friday, January 13, 2012

குண்டும் குழியும் நிறைந்த கீழ்கட்டளை - மேடவாக்கம் பிரதான சாலை!


கீழ்கட்டளை பிரதேசத்தின் மேடவாக்கம் பிரதான வீதியின் சில இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் இந்த சாலையில் செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சாலையை விரைந்து புனரமைத்து தரும் படி பல்லவபுரம் நகராட்சியிடம் இங்குள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.